வளர்ந்த நாடு ஆவதற்கு இந்தியா இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் - ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்

வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் இந்தியா மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், தற்போது அமெரிக்காவின் சிகாகோவில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் இந்தியா மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக  தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், "மோடி அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் நோக்கம் நல்லதுதான். 10 ஆண்டுகளாக உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. அது பலன் அளித்து வருகிறது. அதே சமயத்தில் மற்ற சில துறைகளையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக, உற்பத்தியை பெருக்குவதும், வேலைவாய்ப்பை உருவாக்குவதும் அவசியம். வர்த்தகம் செய்ய உகந்த சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். வரி அதிகாரிகளின் சோதனை குறித்த அச்சத்தை போக்க வேண்டும்.

நாம் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து அடைந்தால், இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை முந்தி விடலாம். எனவே, பொருளாதாரத்தில் 3-வது இடத்தை அடைவது சாத்தியம்தான். ஆனால், வளர்ந்த நாடு ஆவதற்கு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.

பின்னர், மோடி அரசாங்கம் அதன் மூன்றாவது ஆட்சியில் என்ன சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கல்வியில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com