

அமிர்தசரஸ்,
காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 20-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைப்பதற்கு காங்கிரஸ் கட்சியினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநிலத்தில் மொத்தமுள்ள 117 இடங்களில் 109 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்து விட்டது. மீதமுள்ள 8 தொகுதிகளுக்கான பட்டியலும் விரைவில் வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பஞ்சாப் சென்றார். அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறங்கிய அவரை மாநில முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி, மாநில காங்கிரஸ் தலைவர் சித்து, துணை முதல்-மந்திரிகள் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா, ஓ.பி.சோனி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் ராகுல் காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை சந்தித்தார். பின்னர் அவர்களுடன் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு அவர் சென்றார். அங்கு அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார். இதைத்தொடர்ந்து அங்கு நடந்த சமூக விருந்திலும் ராகுல் காந்தி பங்கேற்றார். அவருடன் சித்து, முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் உடனிருந்தனர்.
பிற்பகலில் ஜலந்தரில் காணொலி மூலம் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். இதை முடித்து விட்டு மாலையில் அவர் டெல்லி திரும்பினார். முன்னதாக பஞ்சாப்பின் வளமான எதிர்காலம் தொடர்பாக பொற்கோவிலில் வேண்டிக்கொண்டதாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.