நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் இயற்றியது.
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைத்துள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், எம்.பி.யாக நேற்று பதவியேற்று கொண்டனர். அவர்களில் மீதமுள்ளவர்கள் இன்று எம்.பி.க்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அரசியல் சாசன நகல் ஒன்றை கையில் பிடித்தபடி எம்.பி.யாக இன்று பதவியேற்று கொண்டார்.

இதனிடையே, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் பதவிக்கு போட்டியிட பா.ஜ.க. சார்பில் ஓம் பிர்லா வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான கொடிக்குனில் சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவைக்கான சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் இயற்றியது. இதனை ராகுல் காந்தி ஏற்று கொண்டார். இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்தியா கூட்டணியின் அவை தலைவர்கள் ஒன்று கூடி அவரை தேர்வு செய்துள்ளனர். அவரை தேர்வு செய்தது பற்றி இடைக்கால சபாநாயகருக்கு முறைப்படி தகவல் அனுப்பப்பட்டு உள்ளது என அக்கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com