

மும்பை,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எனது தலைவராக நான் கருதவில்லை என்று படேல் இன சமூக தலைவர்களில் ஒருவரான ஹர்திக்படேல் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஹர்திக் படேல் கூறியதாவது;- தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியை எனக்கு பிடிக்கும். இருந்தாலும், அவரை எனது தலைவராக கருதவில்லை பிரியங்கா காந்தி நேரடி அரசியலில் களம் இறங்க வேண்டும்.
அடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. தேர்தலில் போட்டியிட என்னால் முடியும், அவ்வாறு நான் போட்டியிட விரும்பினால், யாராலும் அதை தடுக்க முடியாது. இருந்தாலும், தேர்தலில் போட்டியிட்டு மக்களவை, சட்டப்பேரவை பிரதிநிதியாக ஆவதை விட மக்களின் எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்வதே மிகவும் முக்கியம் என நான் கருதுகிறேன் என்றார்.
குஜராத்தில் உள்ள படேல் சமூக மக்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க கோரி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தவர் ஹர்திக் படேல். படேல் சமூக மக்களின் பிரதிநிதியாக தன்னை நிலை நாட்டிக்கொண்ட ஹர்திக் படேல், அண்மையில் நடைபெற்று முடிந்த குஜராத் சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார்.