

டெல்லி,
2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்து வருகிறது.
இதில், பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவை விதிகளை மீறி அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ராணுவ முன்னாள் தளபதி நரவானேவின் புத்தகம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேச ராகுல் காந்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற அவை நடவடிக்கையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படது தொடர்பாகவும், விவாதத்தில் தன்னை பேச அனுமதிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.