வேலை வாய்ப்பு மாயமானது போல், ரபேல் ஆவணங்களும் மாயமாகி விட்டன: ராகுல் காந்தி விமர்சனம்

வேலை வாய்ப்பு மாயமானது போல், ரபேல் ஆவணங்களும் மாயமாகி விட்டன என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
வேலை வாய்ப்பு மாயமானது போல், ரபேல் ஆவணங்களும் மாயமாகி விட்டன: ராகுல் காந்தி விமர்சனம்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலை வாய்ப்பு மாயமானது, பொருளாதார வளர்ச்சி மாயமானது. தற்போது, ரபேல் ஆவணங்களும் மாயமாகி விட்டன. ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது ஏன் விசாரணை நடத்தக் கூடாது. இறுதி பேச்சு வார்த்தையை பிரதமர் அலுவலகம் மேற்கொண்டதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆவணங்கள் மாயமானதாக நீங்களே ஒப்புக் கொண்டுள்ளீர்கள், இதன் மூலம் அந்த ஆவணங்கள் உண்மையானவை என்பது தெரிகிறது.

அனில் அம்பானி லாபம் பெறுவதற்காகவே ரபேல் கொள்முதல் தாமதப்படுத்தப்பட்டது. பிரதமர் மோடி குற்றம் செய்யவில்லையென்றால், ஏன் விசாரணை நடைபெற ஒத்துழைக்க மறுக்கிறார். அவர் குற்றம் செய்யவில்லையென்றால் ஏன் அஞ்ச வேண்டும்.

ரபேல் ஆவணங்கள் மாயமானது தொடர்பாக உங்களுக்கு (ஊடகங்கள்) எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், 30 ஆயிரம் கோடி ஊழலில் தொடர்புடைய நபர் மீது எந்த விசாரணையும் இல்லை.

டெல்லியில் கூட்டணி வேண்டாம் என டெல்லி மாநில காங்கிரஸ் ஒருமனதாக முடிவெடுத்து விட்டது.

இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் கேட்கப்படும் விவகாரத்தில், நான் அதிகம் பேசப்போவது இல்லை. ஆனால், சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரின் குடும்பத்தினர், என்ன நடைபெற்றது என்பதை எங்களுக்கு காட்டுமாறு கோரியதாக நான் செய்திகளில் பார்த்தேன் இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com