ரஷியா-உக்ரைன் போரில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன் - ராகுல் காந்தி

ரஷியா-உக்ரைன் போரில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ரஷியா-உக்ரைன் போரில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன் - ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் புதன்கிழமை இரவு ராகுல் காந்தி கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக வளாகத்திற்குச் சென்றார்.

அப்போது அவரிடம் இந்தியா-சீனா உறவுகளின் தற்போதைய நிலை மற்றும் அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் அது எவ்வாறு இருக்கும் என்பது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "சீனா-இந்தியா உறவு கடினமாக உள்ளது. இந்திய பிரதேசத்தில் சிலவற்றை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்தியா-சீனா உறவு எளிமையாக இல்லை. இந்தியாவைத் தள்ள முடியாது. அது நடக்காது" என்று கூறினார்.

தொடர்ந்து உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா மீதான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

"ரஷியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. எங்களுக்கு ரஷியா மீது சில சார்புகள் உள்ளன. எனவே, ரஷியா மீதான இந்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன். இந்தியா ஒரு பெரிய நாடு, அது பொதுவாக எல்லா நாடுகளுடனும் நல்ல உறவை வைத்துக்கொள்ளும். ஒருவருடன் மட்டும் உறவு வைத்துக் கொள்ள இந்தியா ஒன்றும் சிறிய, சார்புடைய நாடு இல்லை.

நாங்கள் எப்போதும் இதுபோன்ற உறவுகளை வைத்திருப்போம். சிலருடன் சிறந்த உறவை வைத்திருப்போம், சிலருடன் உறவுகளை வளர்த்துக்கொள்வோம். அதனால் இங்கு சமநிலை உள்ளது" என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com