எம்.பி.பதவி பறிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற வளாகத்துக்கு திடீரென சென்ற ராகுல்

எம்.பி. பதவி பறிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற வளாகத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திடீரென சென்றார்.
எம்.பி.பதவி பறிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற வளாகத்துக்கு திடீரென சென்ற ராகுல்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு கடந்த 23-ந் தேதி தீர்ப்பு அளித்தது. அதைத் தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இதனால் அவர் மக்களவைக்கு தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் மேல்கோர்ட்டில் மேல்முறையீடு செய்து அங்கே கீழ் கோர்ட்டு விதித்த தீர்ப்பும், தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டால்தான் அவரது பதவி பறிப்பும் ரத்தாகும். மக்களவைக்கு மீண்டும் செல்ல முடியும்.

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்

இந்த நிலையில் அவர் நேற்று நாடாளுமன்ற வளாகத்திற்கு திடீரென சென்றார். அங்குள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் 20 நிமிடம் செலவழித்தார். அங்கு அவர் சிவசேனா (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ராவத் மற்றும் சிலரை சந்தித்தார்.

பின்னர் அவர் தனது தாயாரும், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித்தலைவருமான சோனியா காந்தியுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் பத்திரிகையாளர்களிடம் பேசவில்லை.

ராகுல் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகம் சென்றபோது அங்கு கட்சியின் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com