மேற்கு வங்கத்தில் ‘பாரத் பந்த்’ முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து ரயில் மறியல் போராட்டம்

மேற்கு வங்கத்தில் விவசாயிகளின் ‘பாரத் பந்த்’ முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரி கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்கத்தில் ‘பாரத் பந்த்’ முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து ரயில் மறியல் போராட்டம்
Published on

கொல்கத்தா,

மத்திய அரசு அறிமுகப்படுத்திய 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டம் ஆகிவற்றை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இந்நிலையில் இன்று விவசாயிகள் அறிவித்த பாரத் பந்த் எனப்படும் நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து தற்போது மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜாதப்பூர் ரயில் நிலையத்தில், இடதுசாரி கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய அவர்கள், தண்டவாளங்களில் அமர்ந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்திலும் இன்று காலை, விவசாய அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com