காநாடகத்தில் 36 சதவீதம் பற்றாக்குறையாக மழை பெய்துள்ளதாக மந்திரி செலுவராயசாமி தகவல்

காநாடகத்தில் 36 சதவீதம் அளவுக்கு மழை பற்றாக்குறையாக பெய்துள்ளதாக மேல்-சபையில் விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி கூறினார்.
காநாடகத்தில் 36 சதவீதம் பற்றாக்குறையாக மழை பெய்துள்ளதாக மந்திரி செலுவராயசாமி தகவல்
Published on

பெங்களூரு:

காநாடகத்தில் 36 சதவீதம் அளவுக்கு மழை பற்றாக்குறையாக பெய்துள்ளதாக மேல்-சபையில் விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி கூறினார்.

2 நாட்கள் விடுமுறை

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 3-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து கடந்த 7-ந் தேதி 2023-2024-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்தார். சட்டசபைக்கு சனி, ஞாயிறு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை நேற்று பெங்களூரு விதான சவுதாவில் கூடியது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. கர்நாடக மேல்-சபையில் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர் ஹேமலதா நாயக் கேட்ட கேள்விக்கு விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி பதிலளிக்கையில் கூறியதாவது:-

நல்ல மழை

கர்நாடகத்தில் வறட்சி பகுதிகளை அறிவிப்பது தொடர்பாக வருவாய்த்துறை மந்திரி தலைமையில் துணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் கூட்டம் ஏற்கனவே நடைபெற்று உள்ளது. அடுத்த வாரத்தில் மீண்டும் அந்த குழுவின் கூட்டம் நடைபெறும். அதில் எந்த மாவட்டங்கள் வறட்சி நிலவுகிறது என்பது குறித்து ஆலோசித்து வறட்சி பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

நடப்பு மாதத்தின் 2-வது வாரத்தில் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அதனால் இன்னும் மழை பெய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. கல்யாண கர்நாடக, பல்லாரி, ராய்ச்சூர், கொப்பல், பீதர், யாதகிரி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பை விட மழை குறைவாக பெய்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் இயல்பை விட மழை குறைவாக பெய்துள்ளது.

விதைப்பு பணிகள்

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் நல்ல மழை பெய்யவில்லை. கடந்த ஆண்டு 50 சதவீதம் அளவுக்கு விதைப்பு பணிகள் நடைபெற்றன. இந்த முறை மழை குறைவால் 20 முதல் 23 சதவீதம் அளவுக்கு தான் விதைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. வறட்சி பகுதிகளை அறிவிக்க வேண்டுமெனில் சில வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேணடும். அதன்படியே முடிவு எடுக்க வேண்டும்.

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. இதுவரை பருவமழை 36 சதவீதம் அளவுக்கு பற்றாக்குறையாக பெய்துள்ளது. இது வட கர்நாடக பகுதிகளில் 39 சதவீதமாக உள்ளது.

இவ்வாறு செலுவராயசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com