

ஜெய்ப்பூர்,
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள முஸ்லிம் அல்லாத பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வகைசெய்து மத்திய பா.ஜனதா அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களிலும் ஈடுபடுகின்றன.
இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கேரள மாநில சட்டசபையில் கடந்த மாதம் 31-ந்தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 17-ந்தேதி காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிற பஞ்சாப் மாநில சட்டசபையிலும் இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றினர்.
அந்த வரிசையில் 3-வது மாநிலமாக, முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிற ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இறுதியில் தீர்மானம், குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது. இதன்மூலம் காங்கிரஸ் ஆளுகிற 2 மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.