பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க ராஜஸ்தான் அரசு ரூ.200 கோடி ஒதுக்கீடு

ராஜஸ்தான் அரசு பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க ராஜஸ்தான் அரசு ரூ.200 கோடி ஒதுக்கீடு
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் அரசு 2022-23 பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மம்தா பூபேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து மம்தா பூபேஷ் கூறியதாவது:-

மாநிலம் முழுவதும் 'நான் சக்தி உதான்' திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே இதுபோன்ற திட்டம் பெரிய அளவில் செயல்படுத்தப்படும் முதல் மாநிலம் ராஜஸ்தான் ஆகும். கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் இலவச சானிட்டரி நாப்கின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த திட்டத்திற்காக 2022-23 நிதியாண்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 33 மாவட்டங்களில் உள்ள 60,361 அங்கன்வாடி மையங்களில் 1.15 கோடி பயனாளிகளுக்கும், மாநிலத்தில் உள்ள 34,104 அரசுப் பள்ளிகளில் 26.48 லட்சம் பயனாளிகளுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டில், ராஜஸ்தான் மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஆர்.எம்.எஸ்.சி.எல்) 31 மாவட்டங்களில் உள்ள 26,220 பள்ளிகளுக்கும், 23 மாவட்டங்களில் உள்ள 31,255 அங்கன்வாடி மையங்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கியுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.104.78 கோடியை ஆர்.எம்.எஸ்.சி.எல் செலவிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com