ராஜீவ் கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பை திரும்ப பெறக் கோரிய பேரறிவாளனின் மனு தள்ளுபடி

ராஜீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பை திரும்ப பெறக் கோரிய பேரறிவாளனின் இடைக்கால மனு தள்ளுபடி செய்யப்பட்டது. #RajivGandhiMurderCase #SupremeCourt
ராஜீவ் கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பை திரும்ப பெறக் கோரிய பேரறிவாளனின் மனு தள்ளுபடி
Published on

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 1999-ம் ஆண்டு மே 11-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ஆனால், தான் நிரபராதி என்றும், சுப்ரீம் கோர்ட்டின் அந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும் பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு சி.பி.ஐ.யின் பதிலை சுப்ரீம் கோர்ட்டு கேட்டிருந்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ.யின் பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு, பிரமாண மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், ராஜீவ் காந்தி கொலைச்சதியில் பேரறிவாளனின் பங்கு, சுப்ரீம் கோர்ட்டால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவரது மனு முகாந்திரம் இல்லாதது. அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் பானுமதி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விடுதலை செய்ய வேண்டும் என்ற பேரறிவாளனின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

9 வோல்ட் பேட்டரியை தாண்டி, சதித்திட்டம் தீட்டியதில் பேரறிவாளனுக்கு பங்கு இருப்பதாக மத்திய அரசு வாதம் செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பேரறிவாளனின் வாக்குமூலத்தினை அடிப்படையாக வைத்து அவரது வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும். வெடிகுண்டு தயாரிக்க முக்கியமாக இருந்ததே அந்த பேட்டரிகள்தான். 9 வாட் பேட்டரியை கொண்டு வெடிகுண்டு தயாரிக்க முடியும் என்று டிப்ளமோ படித்த பேரறிவாளனுக்கு தெரியாதா? ராஜீவ் கொலை வழக்கில், 9 வோல்ட் பேட்டரியை தாண்டி பேரறிவாளனுக்கு எதிராக மேலும் சில ஆதாரங்கள் இருக்கின்றன, அதற்கு உங்கள் பதில் என்ன..? பேரறிவாளன் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பேரறிவாளன் விடுதலைப்புலிகளின் அனுதாபி. அவருக்கு விடுதலைப்புலி இயக்கத்தினருடன் நேரடி தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்காக இப்போது தீர்ப்பை மாற்ற வேண்டுமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பை திரும்ப பெறக் கோரிய பேரறிவாளனின் இடைக்கால மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com