

புதுடெல்லி,
தேசிய பாதுகாப்பு படை கமோண்டாக்களின் செயல்பாடுகள் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ஆய்வு நடத்தினார். டெல்லியில் மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணிகளையும் பயங்கரவாத தடுப்பு பணிகளையும் செய்யும் உயர்மட்ட படையான என்.எஸ்.ஜி என்னும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் சுதிப் பிரதாப் சிங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இந்த ஆலோசனையின் போது பயங்கரவாத சூழல்கள் ஏற்படும் போது கருப்பு பூனை என அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையின் தயார் நிலைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தேசிய பாதுகாப்பு படையினருக்கு தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் நெருக்கடியான தருணத்தில் சூழலை விரைவாக கையாளும் வகையில் 24 மணி நேரமும் விழிப்புடன் இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் அதிகாரிகள் கூறியதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஆலோசனையின் போது, உள்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ மற்றும் உள்துறை செயலர் ராஜீவ் மெஹரிஷி உள்ளிட்ட உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.