

புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் 12 பேரை சேர்த்து 245 உறுப்பினர் இடங்கள் உள்ளன. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். இங்கு உறுப்பினர்களாக உள்ளவர்களில் 3-ல் 2 பங்கு பேரின் 6 ஆண்டு பதவிக்காலம் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். இதன்படி வருகிற ஜூன் மாதம் 20 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதில் தமிழகத்தில் இருந்து 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. அதாவது தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் அ.தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், வக்கீல் நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேருக்கும் வருகிற 29.6.2022 அன்று பதவிக்காலம் முடிகிறது.
இதைப்போல கர்நாடகத்தில் பதவிக்காலம் நிறைவடையும் மாநிலங்களவை உறுப்பினர்களில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.