ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: அயோத்தி புறப்பட்டார் பிரதமர் மோடி

ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: அயோத்தி புறப்பட்டார் பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

ராமபிரான் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களின் நீண்டநாள் ஆசையாகும். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ். எஸ். போன்ற அமைப்புகள் நீண்ட காலமாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. ஆனால் அங்கு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருந்ததால் இந்த முயற்சிகள் நிறைவேறாமல் இருந்தன.

பல்லாண்டுகளாக நீடித்து வந்த இந்த சட்டப்போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.

எனவே ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியது. அயோத்தி ராமஜென்மபூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டுவது என முடிவு செய்து, இந்த அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதன்படி ஆகஸ்டு 5-ந்தேதி (இன்று) ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான தலைவர்கள் மற்றும் பிரபலங்களை பங்கேற்க வைப்பது என தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

இதன் தொடர்ச்சியாக ராமர் கோவில் பூமி பூஜைக்கான சடங்குகள் ராமஜென்மபூமியில் நேற்று முன்தினம் காலையில் தொடங்கின. தொடர்ந்து நடந்து வரும் இந்த சடங்குகளின் நிறைவாக இன்று (புதன்கிழமை) பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை 9.35 மணியளவில் விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து லக்னோ கிளம்பினார். அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி கிளம்பும் அவர் 11.30 மணியளவில் அங்குள்ள சாகேத் கல்லூரி மைதானத்தில் இறங்குகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com