

புதுடெல்லி,
அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள். அவ்வாறு செல்லும் பக்தர்கள் ஏராளமான காணிக்கைகளையும் செலுத்தி வருகிறார்கள். இவ்வாறு குவியும் நன்கொடைகளில் கோடிக்கணக்கான பணம் மாயமாகி இருப்பது தெரியவந்தது.இதன் அடிப்படையில் கோவில் அறக்கட்டளை சார்பில் ராமஜென்ம பூமி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, அவிநாஷ் சுக்லா, ராம்சங்கர் மிஸ்ரா, ராம் சப்கர் யாதவ், டின்னு யாதவ், சுபாஷ் சந்திர ஸ்ரீவத்சவா, கருணேஷ் பாண்டே ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இவர்கள் கையாடல் செய்த பணம் சுமார் ரூ.7 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர்.கைதான 8 பேரின் வீடுகளிலும் போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.இந்த சோதனையின்போது ரூ.79.85 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் திருடப்பட்ட பணம், நகைகள் இருக்கிறதா? பணத்தை என்ன செய்துள்ளார்கள் என்பது தொடர்பாக ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்று வீடு முழுவதும் தேடினர். காலையில் தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.