

பார்மர்,
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பகைமை ஊக்குவித்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக யோகா குரு ராம்தேவ் மீது இன்று எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூரைச் சேர்ந்த பதாய் கான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சவுஹாத்தான் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2-ந்தேதி நடந்த கூட்டத்தில் இந்து மதத்தை இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்துடன் ஒப்பிட்டு பேசிய ராம்தேவ், முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை நாடுவதாகவும், இந்து பெண்களைக் கடத்துவதாகவும் குற்றம் சாட்டினார். மற்ற இரண்டு மதங்களும் மதமாற்றத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் நேரத்தில் இந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நல்லது செய்யக் கற்றுக்கொடுக்கிறது என்று கூறினார்.
இந்த நிலையில் ராம்தேவ் மீது, ஐபிசி பிரிவுகள் 153A (மதம், இனம், பிறந்த இடம், இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295A (மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கில், மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் தீங்கிழைக்கும் செயல்கள்) மற்றும் 298 (எந்தவொரு நபரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்துடன் பேசுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.