கற்பழிப்பையும், உண்மை காதலையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து

கற்பழிப்பையும், உண்மை காதலையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
கற்பழிப்பையும், உண்மை காதலையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து
Published on

புதுடெல்லி,

பாலியல் உறவுக்கு பரஸ்பர சம்மதம் தெரிவிப்பதற்கான வயதுவரம்பு 18 ஆக உள்ளது. அதை போக்சோ சட்ட வழக்குகளில், 16 ஆக குறைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், இந்த வயது 18 ஆக நீடிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:- தற்போது ஆண்-பெண் சேர்ந்து படிக்கும் கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளன. அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் ஒருவர்மீது ஒருவர் காதல் கொள்கின்றனர். காதலை குற்றமென்று உங்களால் சொல்ல முடியுமா?.

கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்களையும், உண்மை காதலையும் நாம் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். உண்மை காதலர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதை குற்ற வழக்குகள் போலவே நடத்தக்கூடாது. போக்சோ வழக்குகளில் பெண்ணின் பெற்றோர் அளிக்கும் புகார்களால் சிறைக்கு அனுப்பப்படும் பையன்கள் மனஉளைச்சல் அடைகிறார்கள். இதுதான் சமுதாயத்தின் கசப்பான யதார்த்தம். இருவரும் ஓடிப்போனதை மூடி மறைக்கவும் போக்சோ சட்ட புகார்கள் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து வழக்கு விசாரணையை 26-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com