முப்படைகளும் இணைக்கப்படும் - ராஜ்நாத்சிங் தகவல்

முப்படைகளின் இணைப்பை நோக்கி நாடு வேகமாக நடைபோட்டு வருவதாக ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
முப்படைகளும் இணைக்கப்படும் - ராஜ்நாத்சிங் தகவல்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் 'ராணுவ தளவாடங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார். ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, கடற்படை தளபதி ஹரிகுமார், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:-

ரெயில்வே துறையில் இந்தியா வேகமான முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 9 ஆயிரம் கி.மீ. நீள ரெயில்பாதை, இரட்டை பாதை ஆக்கப்பட்டுள்ளது. ஆனால், 2014-ம் ஆண்டுக்கு முன்பு 5 ஆண்டுகளில் 1,900 கி.மீ. நீள ரெயில்பாதை மட்டுமே இரட்டை பாதை ஆக்கப்பட்டது.

சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு நிலவுவது அவசியம். இருதரப்பினரும் இங்கு வந்திருப்பது, இந்தியாவின் இலக்கை எட்டுவதில் உள்ள உறுதிப்பாட்டை காட்டுகிறது. இந்தியாவின் முப்படைகளையும் இணைப்பதை நோக்கி இந்தியா வேகமாக நடைபோட்டு வருகிறது. பொதுவான தளவாட மையம் இருக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்.

அப்போதுதான் ஒரு படையின் வளங்கள், எவ்வித இடையூறும் இன்றி, மற்ற படைகளுக்கும் கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com