

புதுடெல்லி
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நேற்று நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த சூழலில், இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதலி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் அளித்த பேட்டியின்போது, எங்களுடைய உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் குழுவினர், நாங்கள் அமைதிக்கு தயாராக இருக்கிறோம் என்றே கூறினார்கள்.
நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால், ஈரான் போருக்கும் தயாராக உள்ளது என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். 2-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதிக்குமா? என்ற கேள்விக்கு அவர், அமெரிக்கா எங்களுடைய நிபந்தனைகளை ஏற்று கொண்டால், மற்றொரு பேச்சுவார்த்தைக்கு சாத்தியம் உள்ளது என்று நாங்கள் முறைப்படி முன்பே அறிவித்து விட்டோம் என்று கூறினார்.
ஹார்மூஸ் ஜலசந்தியை பற்றி குறிப்பிட்ட அவர், இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு தொடர்ந்து திறந்து வைத்திருப்போம் என உறுதிப்படுத்திய அவர், ஹார்மூஸ் ஜலசந்தியை அமெரிக்கா முடக்கினால், அது சர்வதேச சட்டம் மற்றும் உலகளாவிய விதிகளை மீறும் செயலாகும் என்றும் எச்சரித்து உள்ளார்.
ஈரானின் சோதனையான காலத்தில் அவர்களுக்கு ஆதரவளித்ததற்காக மத்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் அவர் அப்போது நன்றியை தெரிவித்து கொண்டார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 6 வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்தது.
இதனை தொடர்ந்து, அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையில் ஈரானின் வெளியுறவு மந்திரி சையது அப்பாஸ் அராக்சி, ஈரான் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி அக்பர் அகமதியன், ஈரானின் மத்திய வங்கி கவர்னர் அப்துல் நாசர் ஹிம்மதி ஆகியோருடன், ஈரான் நாடாளுமன்றத்தின் பல்வேறு உறுப்பினர்களும் பாகிஸ்தானுக்கு நேற்று வருகை தந்தனர்.
இந்த குழுவில் பாதுகாப்பு, அரசியல், ராணுவம், பொருளாதாரம் மற்றும் சட்டம் தொடர்பான பிரதிநிதிகள் இருந்தனர். அமெரிக்கா சார்பில் அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினரும் பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர். 6 வாரங்களாக நீடித்த போரை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாகவும், அதற்கான முதல் சந்திப்பாகவும் இது அமைந்தது.
எனினும், இஸ்லாமாபாத் நகரில் உள்ள செரீனா ஓட்டலில் ஏறக்குறைய 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என வான்ஸ் கூறி விட்டு குழுவினருடன் நாடு திரும்பினார்.