புதுவை மாநில அந்தஸ்துக்காக பதவி விலகவும் தயார்: முதல் மந்திரி ரங்கசாமி

புதுச்சேரிக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி, தேவைப்பட்டால் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகவும் தயாராக இருப்பதாக முதல்-அமைச்சர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
முதல் மந்திரி ரங்கசாமி
Published on

புதுச்சேரியில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இன்று வழக்கம் போல அவை கூடியது. அவை கூடியதும், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்வதைக் கண்டித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நசீம் கோரிக்கை விடுத்தார். அப்போது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஜான் குமாரும் புதுச்சேரிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

பதவி விலகவும் தயார்

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துவதற்காக நான் பதவி விலகவும் தயாராக இருக்கிறேன். மாநில அந்தஸ்து கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக நாம் அனைவரும் டெல்லி செல்வோம்.புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால், அரசுக்கும் சட்டசபைக்கும் போதிய அதிகாரங்கள் இல்லாத நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறோம். மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியிடமும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினேன். புதுச்சேரிக்கு தொடர்ந்து அதிகாரங்கள் இல்லாமல் இருப்பது எங்களுக்கு கவலை அளிக்கும் விஷயம் என்று பிரதமரிடம் குறிப்பிட்டேன். புதுச்சேரியின் வளர்ச்சியை வேகப்படுத்தவும், பல்வேறு திட்டங்களை விரைவாக செயல்படுத்தவும் மாநில அந்தஸ்து மிகவும் அவசியம்” என்று தெரிவித்தார்.

உறுப்பினர்களும் பதவி விலக தயார்

முதல்-அமைச்சர் ரங்கசாமியின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்களும் மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி தங்களது பதவிகளை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.இதுகுறித்து சட்டசபையின் தற்காலிக சபாநாயகர் ஏ.அன்பழகன் கூறுகையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏற்கனவே பல முறை சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், புதுச்சேரிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான பல்வேறு தகுதிகள் இல்லாததால், அந்த அந்தஸ்தை பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், எனவே மாநில அந்தஸ்து கோரிக்கையை மட்டுமே வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com