என்கவுண்ட்டரில் பலியான 4 பேரின் உடல்கள் மீண்டும் பிரேத பரிசோதனை: டெல்லி ‘எய்ம்ஸ்’ டாக்டர்கள் நடத்தினார்கள்

ஐதராபாத் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரின் உடல்கள் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
என்கவுண்ட்டரில் பலியான 4 பேரின் உடல்கள் மீண்டும் பிரேத பரிசோதனை: டெல்லி ‘எய்ம்ஸ்’ டாக்டர்கள் நடத்தினார்கள்
Published on

ஐதராபாத்,

ஐதராபாத் புறநகரை சேர்ந்த கால்நடை பெண் டாக்டர், கடந்த மாதம் 27-ந் தேதி திடீரென காணாமல் போனார். மறுநாள் அவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் கற்பழித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட லாரி ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 6-ந் தேதி, சம்பவம் நடந்த இடத்துக்கு 4 பேரையும் போலீசார் கூட்டிச் சென்றபோது, அவர்கள் போலீசாரின் துப்பாக்கியை பறித்து சுட்டனர். கற்கள், கட்டைகளாலும் தாக்கினர். இதனால் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் 4 பேரும் பலியானார்கள்.

அவர்களின் உடல்கள் அதே நாளில் மெகபூப்நகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. என்கவுண்ட்டர் குறித்து சந்தேகம் எழுப்பி தெலுங்கானா ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், ஐதராபாத்தில் உள்ள காந்தி ஆஸ்பத்திரியில் உடல்களை பாதுகாத்து வைக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, காந்தி ஆஸ்பத்திரியில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்யுமாறு தெலுங்கானா ஐகோர்ட்டு கடந்த 21-ந் தேதி உத்தரவிட்டது.

அதை ஏற்று, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் குழு நேற்று ஐதராபாத் காந்தி ஆஸ்பத்திரிக்கு வந்தது. மறு பிரேத பரிசோதனை செய்வதற்கு முன்பு, 4 பேரின் குடும்பத்தினருடன் பேச வேண்டும் என்று அந்த டாக்டர்கள் கேட்டுக் கொண்டனர். ஒரு கையடக்க வீடியோ கேமராவும், கம்ப்யூட்டரும் கேட்டனர்.

அதன்படி, 4 பேரின் குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டனர். மறு பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, 4 பேரின் உடல்களையும் பெற்றுக்கொள்வதாக குடும்பத்தினர் உறுதி அளித்தனர். அதை எய்ம்ஸ் டாக்டர்கள் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.

பின்னர், இதற்கென உருவாக்கப்பட்ட தனி அறையில் அவர்கள் 4 பேரின் உடல்களையும் மறு பிரேத பரிசோதனை செய்தனர். அந்த பணியும் வீடியோ எடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com