கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

கேரளாவில் 22-ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது.
வயநாடு,
நாட்டில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழையானது, 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளாவில் முன்கூட்டியே பெய்ய தொடங்கியது. கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்து அணைகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், கேரளாவின் கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழை பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளது.
இந்த 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. கடந்த 15-ந்தேதி முதல் வடக்கு கேரளாவில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அது இன்னும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன்படி, கேரளாவில் நாளை மழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நாளை வடக்கு கேரளாவில் உள்ள காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடப்பட்டுள்ளது. இதேபோன்று, கேரளாவில் 22-ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.






