

செங்கோட்டையில் விவசாயிகளை அழைத்துச்சென்று கொடியேற்றி அவப்பெயரை ஏற்படுத்தி துரோகம் செய்து விட்டதாக அவர் மீது விவசாய அமைப்பு தலைவர்கள் ஆத்திரத்தில் உள்ளனர். மேலும் தீப் சித்து ஒரு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா தொண்டர் எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் விவசாய அமைப்பினரின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தீப் சித்து, விவசாய அமைப்பு தலைவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது பேஸ்புக் தளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், ஆர்.எஸ்.எஸ். அல்லது பா.ஜனதா தொண்டர் ஒருவர் செங்கோட்டையில் மத கொடி மற்றும் விவசாய கொடியை ஏற்றுவாரா? அல்லது அதைப்பற்றி நினைத்தாவது பார்ப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகளில் பலரும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட சாலையை பயன்படுத்தவில்லை எனக்கூறிய அவர், தாங்களாகவே செங்கோட்டைக்கு சென்றதாக கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தான் துரோகி என்றால் செங்கோட்டையில் நின்றிருந்த பலரும் துரோகிதானே என கேள்வி எழுப்பியுள்ள அவர், இதற்காக விவசாய அமைப்பு தலைவர்கள் வெட்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.