

ஐதராபாத்,
சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகன் விவேக். இவரது மாமனார் பாஸ்கரன்(55) சென்னை அண்ணா நகர் மேற்கில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்துவதாக ஆந்திர மாநில போலீஸார் இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவரை சென்னை அண்ணாநகரில் வைத்து ஆந்திர போலீசார் கடந்த வியாழக்கிழமை கைது செய்து அழைத்துச் சென்றனர். இவர் தமிழகத்தில் இருந்து கூலிக்கு ஆட்களை அழைத்துச் சென்று செம்மரங்களை வெட்டியதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக கடப்பா நாகவேந்திரா ரெட்டி, சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் என மொத்தம் 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 55 செம்மரங்கள், 2 கார்கள், 300 கிராம் தங்கம், 7 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.