

ஐதராபாத்,
நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பாலான மாநில கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்று முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் அகித் ரசூல் கான் மேலும் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும், பிராந்திய கட்சிகள் இணைந்து தேசிய அளவில் புதிய கூட்டணியை உருவாக்கும். அதில் பெரும்பான்மை கிடைத்தால் ஆட்சியமைக்கப்படும். இல்லாவிடில் பிற கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தேசிய அளவில் கூட்டணி அமைப்பதற்காக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் பேசி வருவதாக டி.ஆர்.எஸ். தலைவர்கள் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.