ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - மத்திய ரெயில்வே மந்திரி அறிவிப்பு

ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - மத்திய ரெயில்வே மந்திரி அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரெயில் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.

விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பகுதிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் நபர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 350 பேர் காயமடைந்து உள்ளதாகவும், சுமார் 50 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னைக்கு வந்த ரெயில் விபத்துக்குள்ளான நிலையில், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் தொலைபேசியில் பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும் பலத்த காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிக்காக ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com