உயர் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் தொடக்க பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 40 சதவீதம் ஒதுக்கீடு
பெங்களூரு:
கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறையில் உயர் தொடக்க பள்ளிகளில் (6 முதல் 8-ம் வகுப்பு வரை) பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அந்த துறையில் ஆசிரியர்கள் நியமனத்தில் 40 சதவீத பணியிடங்கள் பதவி உயர்வு மூலமும், 60 சதவீத பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமும் நிரப்ப கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பள்ளி கல்வித்துறையின் ஆசிரியர்கள் நியமன விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் பள்ளி கல்வித்துறையின் அரசு தொடக்க பள்ளிகளில் தற்போது 1.53 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இதில் 85 சதவீத ஆசிரியர்கள் பட்டதாரிகளாக உள்ளனர். இனி வரும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களில் 40 சதவீத பணியிடங்கள் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு அதன் மூலம் நிரப்பப்படும். இந்த முடிவுக்கு நிதித்துறை மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுவரை தகுதி தேர்வு நடத்தப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இனி தகுதி தேர்வு நடத்தாமலேயே பதவி உயர்வு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

