“தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் இயல்பு வாழ்கைக்கு திரும்புங்கள்”:விளம்பரம் மூலம் காஷ்மீர் அரசு வேண்டுகோள்

தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பயப்படாமல், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என பத்திரிகைகளில் காஷ்மீர் அரசு விளம்பரம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
“தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் இயல்பு வாழ்கைக்கு திரும்புங்கள்”:விளம்பரம் மூலம் காஷ்மீர் அரசு வேண்டுகோள்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வந்தது. தற்போது அங்கு பதட்டம் நீங்கி வருவதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பயந்து பலர் கடைகளை திறக்காமல் உள்ளனர்.

இந்நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, உள்ளூர் பத்திரிக்கைகளில் காஷ்மீர் மாநில அரசு முழு பக்க விளம்பரத்தை நேற்று வெளியிட்டது. அதில், நாம் தீவிரவாதிகளுக்கு அடிபணிய போகிறோமா? கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ஜம்மு காஷ்மீர் மக்கள் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளனர். மக்களை ஏமாற்ற தீவிரவாத அச்சுறுத்தலை பிரிவினைவாதிகள் பயன்படுத்தினர்.

தற்போது அதே வழியை தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர். இதை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? இது போன்ற அச்சுறுத்தல்கள் நமது தொழிலை, வாழ்வாதாரத்தை, கல்வி உரிமையை, குழந்தைகளின் எதிர்காலத்தை, காஷ்மீரின் வளர்ச்சியை கெடுக்க நாம் அனுமதிக்க வேண்டுமா? காஷ்மீர் நமது வீடு. நமது நலன் மற்றும் வளம் பற்றி நாம்தான் சிந்திக்க வேண்டும். இதற்கு பயம் ஏன்? என்று கூறப்பட்டுள்ளது.

ஜம்முவில் உள்ள ராணுவ வடக்கு மண்டல தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ரன்பிர் சிங் நேற்று அளித்த பேட்டியில், காஷ்மீரில் ஊடுருவும் வாய்ப்பை எதிர்பார்த்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களில் 500 தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர். தற்போது, காஷ்மீருக்குள் பாகிஸ்தான் ஆதரவுடன் 200 முதல் 300 தீவிரவாதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர், என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com