பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Published on

சுல்தான் பதேரி,

கேரள மாநிலம் சுல்தான் பதேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மாநாடு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் வன்முறை அதிகரித்துவிட்டதை நீங்கள் பார்க்கிறீர்கள். பெண்களுக்கு எதிராக சட்டத்திற்கு புறம்பான செயல்கள், அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது. தினமும் நாட்டில் எங்காவது ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான செய்தியை படிக்கிறோம்.

பெண்கள், குழந்தைகள் மீதான கொடுமைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரமாக மாறிவிட்டது. உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவரே கற்பழிப்பு குற்றவாளியாக இருக்கிறார்.

அதன்பின்னரும் பிரதமர் நரேந்திர மோடி இந்த சம்பவங்கள் பற்றி வாயை திறக்கவில்லை. அவர் மதம் பற்றி பேசுவதிலேயே தீவிர கவனம் செலுத்துகிறார். ஆனால் அவர் மதம் தொடர்பான புத்தகங்களையும் படிக்க வேண்டும்.

சிறுபான்மையினர், தலித்துகளுக்கு எதிரான வன்முறையும் அதிகரித்துவிட்டது. இத்தகைய சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அதிகரித்திருப்பதற்கு காரணம் இந்த நாட்டை நடத்திச்செல்பவர் வன்முறையில் நம்பிக்கை உடையவர் மற்றும் அதிகாரத்தை கண் மூடித்தனமாக பயன்படுத்து பவர் என்பதுதான்.

முன்பு உலகம் நம்மை பார்த்து இந்தியா எந்த திசையில் செல்கிறது என்று வியந்தது. ஆனால் இப்போது உலகம் நம்மை பார்த்துவிட்டு, அந்த நாட்டுக்கு அவர்களது பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதே தெரியவில்லை என்று சொல்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பலமே அதன் பொருளாதாரம் என்பதாக இருந்தது. ஆனால் இப்போது அதுவே மிகப்பெரிய பலவீனமாக ஆகிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்வதற்கான திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com