ஆறுகள், அணைகள் நிரம்பின; கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் மொத்தம் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது.
ஆறுகள், அணைகள் நிரம்பின; கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் நடப்பு ஆண்டில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இதனால், ஜூன் மாதத்திற்கு பதிலாக மே மாத இறுதியில் மழை பெய்ததில், கேரளாவில் வெள்ள பெருக்கும் ஏற்பட்டது.

இந்நிலையில், கேரளாவில் நேற்று நள்ளிரவில் பெய்த தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் பரவலாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், ஆறுகள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதனை முன்னிட்டு, 24 மணிநேரத்தில் 20 செ.மீ.க்கு கூடுதலாக மழை பெய்ய கூடும் என அறிவித்து, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இதேபோன்று, கூடுதலாக 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டில் இருந்து ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது. இதனால், மொத்தம் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது.

எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களின் சில பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டு சாலைகள் முழுவதும் சூழ்ந்துள்ளன. வீடுகளும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால், அடுத்த சில நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்வதுடன், பலத்த காற்றும் வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் மின் உற்பத்தி மற்றும் நீர் பாசனத்திற்காக பயன்படும் பல்வேறு அணைகளிலும் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்த அணைகள் 3-ம் கட்ட எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com