ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறைகேடு விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடந்த முறைகேடு தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறைகேடு விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்துக்கும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆந்திர மாநில செயலாளர் காகா ராமகிருஷ்ணா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார்.

அதில், தேர்தல்களில் பணபலம் மற்றும் ஆள் பலம் ஆதிக்கம் செலுத்துவதாகவும், ஆனால் இதை தடுக்க இதுவரை போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் கூறி உள்ளார். நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக செலவு செய்ததாக 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை ஒரு வேட்பாளர் கூட தகுதிநீக்கம் செய்யப்படவில்லை என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் நடந்த முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும் மற்றும் அமலாக்கப்பிரிவு, மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆகியவற்றுக்கும் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு, தேர்தல் கமிஷன், அமலாக்கப்பிரிவு, மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.


X

Daily Thanthi
www.dailythanthi.com