

புதுடெல்லி
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நேற்று ஓம்பிரகாஷ் ராவத் பதவி ஏற்றார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் 38 கோடி வாக்காளர்களின் அடையாள அட்டை ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பணியை 100 சதவீதம் முழுமை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியான நடவடிக்கையாகும். இல்லை யெனில் இந்த விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டு இருக்கும்.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத் தும் ஒவ்வொரு தடவையும் பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்துவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஒரு கதவை அடைத்தால், வேட்பாளர்கள் வேறு ஒரு கதவை திறந்து விடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் இனி பணப்பட்டுவாடாவைத் தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக புதிய வியூகங்களை கையாள திட்டமிட்டுள்ளோம்.
ஆர்.கே.நகர் தேர்தலில் இந்த முறை குறைவான பணத்தையே தேர்தல் ஆணையத்தால் பிடிக்க முடிந்தது. தமிழகத்தில் பணப்பட்டுவாடாவுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்வோம்.
பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு சட்ட ரீதியாக கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.
அதற்கு நிறைய கால அவகாசம் தேவை. எனவே அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சட்ட சபைக்கு தேர்தல் நடத்த சாத்தியக் கூறுகள் உள்ளதா? என்பது பற்றி நான் கருத்து சொல்ல இயலாது.
ஓட்டுப்பதிவுக்கு பயன் படுத்தப்படும் மின்னணு எந்திரங்கள் தொடர்பாக
மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த மேலும் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு தேர்தல் ஆணையர் ராவத் கூறினார்.
#ECI #OmPrakashRawat # #RKnagarelection