

புதுடெல்லி
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பதவி வகித்த ரபி சங்கர் பதவி காலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. இதனால், அந்த பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில், ரோகித் ஜெயின் 3 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அவர் இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக பதவி வகித்து வரும் நிலையில், மே 3-ந்தேதி முதல் அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த பதவியில் அவர் நீடிப்பார். மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
1934-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்ட பிரிவுகளின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கியானது, 1935-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி தனியார் வங்கியாக உருவாக்கப்பட்டது. பின்னர் 1949-ம் ஆண்டு அது தேசியமயம் ஆக்கப்பட்டது.
தொடக்கத்தில் கொல்கத்தா நகரில் இதன் மத்திய அலுவலகம் செயல்பட்டு வந்தது. இதன்பின்னர் 1937-ம் ஆண்டு மும்பை நகருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் மும்பையில் இருந்து செயல்பட்டு, கொள்கை முடிவுகளை உருவாக்கி வருகிறார்.