

பெங்களூரு,
கர்நாடகாவில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க, மகாபாரத துரியோதனன் பாணியில் குளத்து நீருக்குள் புதர்களுக்கு நடுவே பதுங்கியிருந்த பிரபல ரவுடியை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம், ஷிவமொக்கா மாவட்டம் பத்ராவதி ஹுட்டா காலனி பகுதியைச் சேர்ந்தவர் திலீப் என்ற கரியா (வயது 19). இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 16 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இவருக்கு எதிராக கோர்ட் 3 முறை ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (என்.பி.டபிள்யு) பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை பத்ராவதி நியூ டவுன் போலீஸ் நிலைய ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசாருக்கு திலீப்பின் நடமாட்டம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திலீப்பை வளைத்துப் பிடிக்க முயன்றனர். போலீசாரைக் கண்டதும் தப்பியோடிய திலீப், அங்குள்ள அனந்தா பள்ளி அருகே புதர்கள் மண்டி கிடந்த ஒரு பாழடைந்த குளத்திற்குள் குதித்தார். தப்பிக்க வழியில்லாததால், குளத்து நீருக்குள் முழுமையாக மூழ்கி, அவ்வப்போது சுவாசிப்பதற்காக மட்டும் தலையை வெளியே நீட்டி பதுங்கியிருந்தார். மகாபாரதப் போரின் இறுதியில் துரியோதனன் வைசம்பாயன ஏரிக்குள் பதுங்கியிருந்தது போல, போலீசாருக்குத் தெரியாமல் குளத்திற்குள் ஒளிந்துகொள்ள திலீப் திட்டமிட்டுள்ளார்.
குளக்கரையில் தேடிய போலீசாருக்கு, தண்ணீருக்குள் புதர்கள் அசைவதும், ஆங்காங்கே நீர் குமிழ்கள் எழுவதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. திலீப் தண்ணீருக்குள் தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்த ஆய்வாளர் ரமேஷ் மற்றும் தலைமை போலீஸ் பிரசன்னா ஆகியோர், சற்றும் யோசிக்காமல் குளத்திற்குள் குதித்தனர். நீருக்குள் ஒளிந்திருந்த ரவுடி திலீப்பை மடக்கிப் பிடித்து வெளியே இழுத்து வந்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட திலீப், "துரியோதனன் கதையை நினைவில் வைத்தே குளத்திற்குள் பதுங்கினேன்" என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். சினிமா பாணியில் குளத்தில் குதித்து ரவுடியை தைரியமாகப் பிடித்த காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசாரை ஷிவமொக்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) பி. நிகில் பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கியுள்ளார்.