

மங்களூரு:-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பகுதியை சேர்ந்தவர் மோகன் தாஸ் (வயது35). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் மோகன் தாஸ் எண்ணிற்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அதில், ஆன்லைனில் பகுதிநேர வேலை உள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய மோகன்தாஸ் மாமநபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.1,000 பணத்தை அனுப்பினார். அவருக்கு ரூ.3 ஆயிரம் திரும்ப வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் பல்வேறு தவணைகளாக ரூ.10 லட்சத்து 88 ஆயிரம் வரை மர்மநபருக்கு அனுப்பினார். ஆனால் அவருக்கு மர்மநபர் கூறியபடி பணத்தை திரும்ப அனுப்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த மோகன் தாஸ் மர்மநபரை தொடாபு கொண்டார். அப்போது அவரின் எண் சுவிட்ச்-ஆப் என வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை மோகன் தாஸ் உணர்ந்தார். இதுகுறித்து அவர் மங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.