விவசாயிகளுக்கு அடுத்த தவணையாக ரூ.19,500 கோடி; பிரதமர் மோடி நாளை விடுவிக்கிறார்

9.75 கோடி விவசாய குடும்பங்கள் பயன் பெறும் வகையில் அடுத்த தவணையாக ரூ.19,500 கோடி நிதியை பிரதமர் மோடி நாளை விடுவிக்கிறார்.
விவசாயிகளுக்கு அடுத்த தவணையாக ரூ.19,500 கோடி; பிரதமர் மோடி நாளை விடுவிக்கிறார்
Published on

புதுடெல்லி,

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.

இந்த திட்டத்தில் இதுவரை ரூ.1.38 லட்சம் கோடி நிதி உதவியானது, விவசாய குடும்பங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை நிதியை, பிரதமர் மோடி நாளை பிற்பகல் 12:30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக விடுவிக்க இருக்கிறார். இந்த விழாவில் மத்திய வேளாண் மந்திரியும் கலந்து கொள்கிறார்.

இதன்படி 9.75 கோடிக்கும் கூடுதலான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,500 கோடி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவதுடன், நாட்டு மக்களிடமும் உரையாற்றுகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com