மத்திய பிரதேசத்தில் வண்டுகளை பிடித்தால் ரூ.2 சன்மானம்; சால் மரங்களை பாதுகாக்க வனத்துறை புதிய திட்டம்

பூச்சிகளை மாலைகளாகக் கட்டி, வனத்துறை அமைத்துள்ள சிறப்பு மையங்களில் ஒப்படைத்து மக்கள் பணம் பெற்று வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் வண்டுகளை பிடித்தால் ரூ.2 சன்மானம்; சால் மரங்களை பாதுகாக்க வனத்துறை புதிய திட்டம்
Published on

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள சால் வகை காடுகளைப் பாதுகாக்க, வனத்துறை சார்பில் நூதன விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, சால் மரங்களை அழித்து வரும் 'சால் போரர்' வகை வண்டுகளைப் பிடிக்கும் கிராம மக்களுக்கு, ஒரு பூச்சிக்கு ரூ. 2 சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்று வண்டுகளை பிடித்து வருகின்றனர். காடுகளில் உள்ள மரங்களில் இருந்து பிடிபடும் பூச்சிகளை, 100 பூச்சிகள் கொண்ட மாலைகளாகக் கட்டி, வனத்துறை அமைத்துள்ள சிறப்பு மையங்களில் ஒப்படைத்து மக்கள் பணம் பெற்று வருகின்றனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2026-27 ஆம் ஆண்டில் சுமார் 30,487 ஹெக்டேர் பரப்பளவு காடுகளும், 1.47 லட்சம் மரங்களும் இந்த பூச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டபோது, பெருமளவில் மரங்களை வெட்டி அகற்ற வேண்டியிருந்தது.

தற்போது மீண்டும் அதே நிலை ஏற்படாமல் இருக்க, ‘ட்ராப் ட்ரீ’ என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். பூச்சிகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட 1,46,784 மரங்களை வெட்டி அகற்ற மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com