தொழிலாளியிடம் ரூ.2¼ லட்சம் மோசடி;போலீசார் விசாரணை

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தொழிலாளியிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்யப்பட்டார். போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தொழிலாளியிடம் ரூ.2¼ லட்சம் மோசடி;போலீசார் விசாரணை
Published on

சிவமொக்கா;

சிவமொக்கா டவுன் திப்பு நகர் பத்மா டாக்கீஸ் பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவர், சிவமொக்கா சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எனது செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது.

அதில் தனியார் நிறுவனம் பெயரில் குவைத் நாட்டில் அதிக சம்பளத்தில் வேலை இருப்பதாகவும், வேலைக்கு சேர விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட செல்போன் எண்ணை தொடர்புகொள்ளும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து நானும், செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வேலைக்கு சேர விருப்பம் தெரிவித்தேன்.

அப்போது என்னிடம், எதிர்முனையில் தனித்தனியாக பேசிய நபர்கள் வேலைக்கு சேருவதற்கு முன்பணமாக ரூ.2.20 லட்சம் நாங்கள் கூறும் வங்கிகணக்கிற்கு செலுத்தும்படி தெரிவித்தனர். இதை நம்பி நானும், அவர்கள் கூறிய வங்கிக்கணக்கிற்கு பணத்தை கட்டி முடித்தேன்.

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் வேலை பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக கேட்க அவர்களை செல்போனில் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளதாக வருகிறது. அப்போது தான் வேலை வாங்கி தருவதாக தன்னிடம், மர்மநபர்கள் பணம் மோசடி செய்தது தெரியவந்தது.

எனவே, மர்மநபர்களை கண்டுபிடித்து பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் பேரில் சிவமொக்கா சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com