ரூ.200 கோடி பணம் கேட்டு மிரட்டல் வழக்கு; சுகேஷின் மனைவிக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் மறுப்பு

ரூ.200 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் சுகேஷின் மனைவி உள்பட 3 பேருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்து உள்ளது.
ரூ.200 கோடி பணம் கேட்டு மிரட்டல் வழக்கு; சுகேஷின் மனைவிக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் மறுப்பு
Published on

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்டு உள்ளார். 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது தொழில் அதிபர் ஷிவிந்தர் சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் மனைவியான அதிதி சிங்கிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது.

மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள், பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

எனினும், ரூ.200 கோடி மோசடி வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு பாட்டியாலா கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. பின்னர், அந்த ஜாமீன் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

ரூ.200 கோடி பறித்ததாக மற்றொரு வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரும், அவருடைய மனைவி லீனா மரியா பாலும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில், சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா மரியா பவுலோஸ் சார்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுதவிர, கம்லேஷ் கோத்தாரி மற்றும் பி. மோகன் ராஜ் ஆகிய இருவரும் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால், இந்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.

சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பவுலோஸ் மற்றும் பலர் கடந்த ஆண்டில் இருந்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தினேஷ் குமார் சர்மா இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com