

திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட ஜனவரி மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
ஜனவரி மாதம் 1-ந்தேதியில் இருந்து 12-ந்தேதி வரை தினமும் 12 ஆயிரம் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்துக்காக 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை தினமும் 20 ஆயிரம் ரூ.300 டிக்கெட்டுகளும், 23-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை தினமும் 12 ஆயிரம் ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.
ஏற்கனவே 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தது. ஜனவரி மாதம் முதல் தினமும் 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனிலும், தினமும் 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாகவும் கவுண்ட்டர்களிலும் வழங்கப்படுகிறது.
இலவச தரிசன டிக்கட்டுகள் பெறும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள சீனிவாசம், விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் கவுண்ட்டர்கள் திறக்கப்பட உள்ளன. நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வருகிற 30-ந்தேதி வழங்கப்பட உள்ளது.
கல்யாண உற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை பக்தர்கள் ஆன்லைனில் கண்டுகளிக்க வரும் 26-ந்தேதி 5,500 நித்ய சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. 27-ந்தேதி வாடகை அறைகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
ஜனவரி மாதம் 11-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை 4 நாட்கள் அறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. பக்தர்கள் நேரடியாக வந்து அறைகளை பெற்றுக் கொள்ளலாம், என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பெய்த மழையால் கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதியில் இருந்து இந்த மாதம் 11-ந்தேதி வரை ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்து தரிசனத்துக்கு வரமுடியாத பக்தர்கள் ஜனவரி மாதம் 10-ந்தேதியில் இருந்து ஜூலை மாதம் 10-ந்தேதி வரை 6 மாத காலத்துக்கு எப்போது வேண்டுமானாலும் பழைய தரிசன டிக்கெட்டுகளின் எண் மூலம் ஆன்லைனில் புதிய தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு தரிசனம் செய்யலாம், என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவிக்கப்பட்டுள்ளது.