

புதுடெல்லி,
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன் மூலமாக ஒரு பெரிய மாற்றம் வரப்போகிறது. இதை வெறும் சம்பள உயர்வுன்னு மட்டும் பார்க்க முடியாது. இது ஒரு முக்கியமான பேட்டர்னை உருவாக்குது. இதுவரைக்கும் ஊழியர்கள் ஒரு நியாயமான ஹைக் கிடைக்கணும்னா 10 வருஷம் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கு. ஆனா இப்போ யூனியன்கள் முன்வைக்கிற இந்த DA merger ஐடியா அந்த சிஸ்டத்தையே மாத்தப்போகிறது என நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் புதிய ஊதியத்தை தீர்மானிக்கவுள்ள 8-வது ஊதியக் குழுவின் கூட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது . கடந்த செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலும், 9-ம் தேதி புதுச்சேரியிலும் தனது மிக முக்கியமான கூட்டங்களை 8வது ஊதியக்குழு கமிஷன் நடத்தியது.
இந்த கூட்டங்களின் போது நாடு முழுவதிலும் உள்ள தகுதியுள்ள ஊழியர் சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் தங்கள் கருத்துகள், சிக்கல்கள் மற்றும் எதிர்காலக் கோரிக்கைகளை ஊதியக் குழுவின் உறுப்பினர்களிடம் நேரடியாக முன்வைத்துள்ளார்கள்.8வது ஊதியக் குழு தனது இறுதிப் பரிந்துரைகளைத் தயார் செய்து மத்திய அரசிடம் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் அறிந்து கொள்ளவே இத்தகைய கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தக் கூட்டங்கள் ஒரு சிறந்த தளத்தை அமைத்துக்கொடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
சென்னையில் நடந்த கூட்டம், தமிழ்நாட்டில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தன. தகுதிவாய்ந்த ஓய்வூதியதாரர் சங்கங்களும் பல்வேறு அமைப்புகளும் தங்கள் நீண்டகாலக் குறைகளை ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.
ஓய்வூதியப் பலன்களை மேம்படுத்துதல், ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்கள் மற்றும் குறைகளுக்கு விரைவான தீர்வு காணுதல் போன்ற விவகாரங்கள் இக்கூட்டங்களில் முக்கியமாக விவாதிக்கப்பட்டிருப்பதாக ஓய்வூதியதாரரர்கள் கூறினார்கள்.. மேலும், பணவீக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில், அவர்களின் ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புச் சலுகைகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அச்சங்கங்கள் வலுவாக வலியுறுத்தி உள்ளன.
அதேபோல் சென்னை ஜி.பி.ஓ. (GPO) ஓய்வூதியதாரர்கள் சங்கம் 8-வது ஊதியக் குழுவிடம் ஐந்து முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது. 'பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அரசு ஏற்காமல் இருந்து வருகிறது. ஏனெனில் தற்போது உள்ள புதிய ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களின் எதிர்காலத்திற்குப் பாதுகாப்பை அளிக்கவில்லை என்ற ஆதங்கம் அரசு ஊழியர்களுக்கு உள்ளது. அதேபோல் அரசுத் துறையில் 'நிரந்தர ஊதிய மறுஆய்வு நடைமுறை'யை உருவாக்கவும், குறைந்தபட்ச ஊதியத்தை ஒரே தவணையில் ரூ.68,000-ஆக உயர்த்தவும் அவர்கள் கோரினர்.
இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதிச் சலுகைகள் பெறும் நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில், MACP (மாற்றியமைக்கப்பட்ட உறுதிசெய்யப்பட்ட பணி முன்னேற்றத் திட்டம்) முறையில் புதிய முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இதன்படி, ஒரே பதவியில் பதவி உயர்வு ஏதுமின்றி 10, 20 மற்றும் 30 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு, அதிகபட்சம் மூன்று தவணைகளில் பதவி உயர்விற்கு இணையான நிதிச் சலுகை வழங்கப்படும் என கூறப்படுகிறது. மறுபுறம், LDCE (வரையறுக்கப்பட்ட துறைசார் போட்டித் தேர்வு) அல்லது பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெற்றதால் MACP சலுகையை இழந்த ஊழியர்களுக்கு, MLCB (MACP சலுகை இழப்பீட்டுத் திட்டம்) மூலம் ஒவ்வொரு 10 ஆண்டு பணிக்கும் ஒரு ஊதிய உயர்விற்கு இணையான நிதிச் சலுகை இழப்பீடாக வழங்கப்படலாம் என்கிறார்கள்.
இதனிடையே 8வது ஊதிய குழு பரிந்துரை குறித்து நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட கருத்து பெரும் விவாதத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி நெட்டிசன் கூறுகையில்,மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன் மூலமாக ஒரு பெரிய மாற்றம் வரப்போகிறது இதை வெறும் சம்பள உயர்வுன்னு மட்டும் பார்க்க முடியாது. இது ஒரு முக்கியமான பேட்டர்னை உருவாக்குது. இதுவரைக்கும் ஊழியர்கள் ஒரு நியாயமான ஹைக் கிடைக்கணும்னா 10 வருஷம் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கு. ஆனா இப்போ யூனியன்கள் முன்வைக்கிற இந்த DA merger ஐடியா அந்த சிஸ்டத்தையே மாத்தப்போகுது.
ஒவ்வொரு முறையும் DA அளவு 25% தாண்டும்போது அதை Basic Pay கூட சேர்த்துடணும்னு ஒரு கோரிக்கை இருக்கு. இது நடந்தா என்ன ஆகும் தெரியுமா. Level 6 ஊழியர் ஒருத்தருக்கு 7th Pay Commission படி 35,400 ரூபாய் Basic Pay இருக்குன்னு வச்சுப்போம். இப்போ 2.1 fitment factor அப்ளை பண்ணா அவங்க Basic Pay 74,340 ரூபாயா மாறும்.
இதோட 7% வருடாந்திர இன்கிரிமென்ட் மற்றும் DA எல்லாம் சேர்த்து கணக்கு போட்டா 2033 ஜனவரி வாக்கில் அவங்களோட மொத்த சம்பளம் 1,52,798 ரூபாயா இருக்கும். அதாவது 2026-ல் கிடைக்கப்போற 74,340 ரூபாயை விட 2033-ல் கிடைக்கப்போற தொகை இரண்டு மடங்கு அதிகம். வெறும் ஏழு வருஷத்துல Basic Pay டபுள் ஆகுற ஒரு சூழலை இந்த மெர்ஜர் பேட்டர்ன் உருவாக்கித்தரும்.
பத்து வருஷம் வெயிட் பண்ணாம சீக்கிரமே ஒரு உருப்படியான சம்பள உயர்வை பார்க்கணும்ங்கிறதுதான் இந்த பேட்டர்னோட நோக்கம். இது வெறும் ப்ரோபோசல் தான் என்றாலும் ஊழியர்களோட மொரல் மற்றும் பணவீக்கத்தை சமாளிக்க இது ரொம்ப அவசியம்னு தோணுது. ரிட்டையர்மென்ட் பெனிபிட்ஸ் கணக்கிடும் போதும் இந்த மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" இவ்வாறு கூறியுள்ளார்.