

மும்பை,
மராட்டியத்தில் சாங்கிலி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக சஞ்சய்காகா பாட்டீல் எம்.பி. போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த மாவட்ட பா.ஜனதா தலைவர் பிரிதிவிராஜ் தேஷ்முக் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரசாரத்தின் போது, பிரிதிவிராஜ் தேஷ்முக்கிடம், கூட்டத்தில் இருந்தவர், சஞ்ஜய்காகா பாட்டீல் மீண்டும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன தருவீர்கள்? என கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் உங்களுக்கு ரூ.5 லட்சம் கிடைக்கும் என கூறினார்.
பின்னர் இதனை சுதாரித்துக்கொண்ட அவர், தான் நகைச்சுவையாக தான் அப்படி குறிப்பிட்டதாக தெரிவித்து தனது பேச்சை தொடர்ந்தார். ஆனால் அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தேர்தல் கமிஷனில் புகாரும் அளிக்கப்பட்டு உள்ளது. புகார் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.