

சென்னை,
வங்கியில் மோசடி செய்தவர்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 50 பேரின் விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் மொத்தம் ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. இதில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி உள்ளிட்டோரது பெயர்களும், அவர்களது நிறுவனங்களும், கடன் விவரமும் இடம்பெற்றிருந்தன.
இதனைதொடர்ந்து, வங்கிக் கடன் மோசடி அதிகம் செய்த முதல் 50 பேரின் பட்டியலை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் கூறினேன். இதற்கு நிதி-மந்திரி பதில் ஏதும் அளிக்கவில்லை. தற்போது ரிசர்வ் வங்கி விவரங்களை வெளியிட்டு விட்டது. அந்த பட்டியலில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட பாஜகவின் நண்பர்கள் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் இதனால்தான் இந்த விவகாரத்தில் உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று விளக்கமாக பதில் அளித்திருந்தார்.
இதனிடையே வாராக்கடன் என்பது வேறு, கடனை கழித்து கணக்கு வைத்திருப்பது என்பது வேறு. இது குறித்து ராகுல் காந்தி, ப.சிதம்பரத்திடம் டியூசன் கற்க வேண்டும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் கடன் தள்ளுபடி தொடர்பாக எழுந்துள்ள விவாதம் குறித்து முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டரில், ரூ 68,000 கோடி வாரா கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்து உள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை, மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா.
மத்திய அரசு இந்த மாபெரும் தவற்றை திருத்த ஒரே வழிதான் உண்டு. ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும். மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வராக் கடன் தொகைகளை வராக் கடன் என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிடவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.