இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற விதி தமிழகத்துக்கு பொருந்தாது மராத்தா இடஒதுக்கீடு வழக்கில் தமிழகம் வாதம்

இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற விதி தமிழகத்துக்கு பொருந்தாது என மராத்தா இடஒதுக்கீடுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அரசியல்சாசன அமர்வு முன் நடைபெறும் வழக்கில் தமிழகம் வாதிட்டுள்ளது.
இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற விதி தமிழகத்துக்கு பொருந்தாது மராத்தா இடஒதுக்கீடு வழக்கில் தமிழகம் வாதம்
Published on

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் சட்டத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது.

கல்விரீதியிலும், சமூகரீதியிலும் பின்தங்கிய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளதா என்ற விவகாரம் தொடர்பாக அனைத்து மாநிலங்களும் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மத்திய அரசு வாதம்

இந்நிலையில் அரசியல்சாசன அமர்வு முன் நேற்று நடைபெற்ற 7-ஆவது நாள் விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்ற மராட்டிய சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது என வாதிட்டார்.

ஜார்க்கண்ட் சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல், இந்த நாட்டில் நடைபெறும் அனைத்துமே அரசியலை மையமாக கொண்டுள்ளது என வாதிட்டார்.

பீகார், ராஜஸ்தான்

பிகார் சார்பில் ஆஜரான வக்கீல் மணீஷ்குமார் வாதிடுகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு அளிக்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டால், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இடங்கள் குறைந்துள்ளன என்றார். ராஜஸ்தான் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ஒரு சமூகத்துக்கு சரியான இடஒதுக்கீடு கிடைக்கவில்லையென்றால் 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கும் அதிகமாக நடைமுறைப்படுத்த மாநிலங்களை அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.

தமிழகத்தின் வாதம்

தமிழகத்தின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெயந்த் முத்துராஜ் தனது வாதத்தில், தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளிட்ட 94.6 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர். தமிழகத்தில் விகிதாசாரத்தின்படி பார்த்தால் 94.6 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். ஆனால் 69 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடாக உள்ளது என்றார்.

அதற்கு நீதிபதிகள், தமிழகத்தின் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை, தமிழத்தின் இடஒதுக்கீடுக்கு எதிராகவும் வழக்கு இல்லை என்றனர்.

விசாரணை தள்ளிவைப்பு

அதைத் தொடர்ந்து ஜெயந்த் முத்துராஜ், இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற விதி தமிழகத்துக்கு பொருந்தாது. போதுமான தரவுகள் இல்லாமல் 50 சதவீத இடஒதுக்கீடு விதியை நாடு முழுவதும் அமல்படுத்தினால் சட்டப்பேரவைக்கு உள்ள சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பறிப்பது போலாகிவிடும் என வாதிட்டதுடன், தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்தே நாளை (இன்று) வாதங்களை முன்வைப்பார் என்றும் தெரிவித்தார்.

அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com