டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு டாலரின் மதிப்பு ரூ.80 ஆக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Image Courtacy: ANI
Image Courtacy: ANI
Published on

புதுடெல்லி,

இந்திய வரலாற்றில் இதுவரை காணாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80 என்ற அளவில் சரிந்து இன்றைய வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. தொடர்ந்து இரண்டு நாட்கள் ஏற்றத்திற்குப் பிறகு இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் சரிவைச் சந்தித்தன.

இன்று காலை அந்நியச் செலாவணிச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடன், டாலருக்கு எதிராக ரூ.79.99 என்று தொடங்கியநிலையில் அடுத்த சில நிமிடங்களில் ரூ.80.02 ஆகச் சரிந்தது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தப் போகிறது என்ற தகவலும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதும் ரூபாய் மதிப்பு சரிவதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த முடியாது எனத் தெரிவித்ததால், நேற்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் உயர்ந்தது.

வரும் 26 மற்றும் 27ம் தேதி பெடரல் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் வங்கி 100 புள்ளிகள் வரை உயர்த்தும் எனத் தெரிகிறது. இந்த அச்சத்தால், முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறும்போது டாலர் மதிப்பு வலுவடைந்து ரூபாய் மதிப்பு சரிகிறது.

காலை 9.40 மணியளவில், சென்செக்ஸ் 131.36 புள்ளிகள் அல்லது 0.24 சதவீதம் சரிந்து 54,389.79 புள்ளிகளிலும், நிப்டி 25.55 புள்ளிகள் அல்லது 0.16 சதவீதம் சரிந்து 16,252.95 புள்ளிகளிலும் இருந்தது. நிப்டி 50 பங்குகளில், 29 பச்சை நிறத்திலும், மீதமுள்ளவை சிவப்பு நிறத்திலும் இருப்பதாக தேசிய பங்குச் சந்தை தரவு காட்டியது.

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், உள்நாட்டு பங்குச் சந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

X

Daily Thanthi
www.dailythanthi.com