ஊரக உள்ளாட்சித் தேர்தல்: ஆந்திராவில் ஆளும் கட்சி அமோக வெற்றி

ஆந்திராவில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றிபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

விஜயவாடா,

ஆந்திரபிரதேச மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் 515 ஜில்லா பரிசத் இடங்களுக்கும், 7 ஆயிரத்து 220 மண்டல் பரிசத் இடங்களுக்கும் இத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையை முடித்து ஏப்ரல் 10-ந் தேதி முடிவுகள் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறி எதிர்க்கட்சிகளான தெலுங்கு தேசம், பாரதீய ஜனதா, ஜன சேனா ஆகியவை ஆந்திரா ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தன. அதையடுத்து, வாக்கு எண்ணிக்கைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு ஐகோர்ட்டின் தனி அமர்வு கடந்த வியாழக்கிழமை அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், கடைசியாக வந்த தகவலின்படி, ஜில்லா பரிசத்தில் 248 இடங்களையும், மண்டல் பரிசத்தில் 4,430 இடங்களையும் கைப்பற்றி ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.

இது, பல்வேறு தடைகள், சர்ச்சைகளையும் தாண்டி ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com