ரஷிய போர்; உக்ரைனில் இருந்து வெளியேறிய 18 ஆயிரம் இந்தியர்கள்

இந்தியாவின் முதல் பயண அறிவுறுத்தலை தொடர்ந்து இதுவரை 18 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர்.
ரஷிய போர்; உக்ரைனில் இருந்து வெளியேறிய 18 ஆயிரம் இந்தியர்கள்
Published on

புதுடெல்லி,

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர். ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து உள்ளதால் உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மார்ச் 9-ம் தேதிக்குள் 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மார்ச் 5-ல் 3 விமானங்களையும், மார்ச் 6, 7, 8 தேதிகளில் முறையே ஒரு விமானமும் இயக்கப்படும். மார்ச் 9ந்தேதி ஒரு விமானமும் இயக்கப்பட உள்ளது என மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் முதல் அறிவுறுத்தலை தொடர்ந்து இதுவரை, உக்ரைனை விட்டு 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேறி உள்ளனர் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் 18 விமானங்களில் இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுவர். இந்திய விமான படையின் 3 சி-17 விமானங்கள் மற்றும் ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், கோ பர்ஸ்ட் மற்றும் கோ ஏர் உள்ளிட்ட பிற வர்த்தக விமானங்கள் வழியே அவர்கள் மீட்கப்படுவர்.

இதுவரை 30 விமானங்களில் 6,400 இந்தியர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். அடுத்த 2 முதல் 3 நாட்களில் எண்ணற்ற இந்தியர்களை அழைத்து வருவதற்காக அதிகளவிலான விமானங்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம். உக்ரைன் அரசாங்கம் மற்றும் அண்டை நாடுகளுக்கு எங்களுடைய பாராட்டுதல்களை தெரிவித்து கொள்ள விரும்புகிறோம் என்று மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com