சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: முன்னாள் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கைது

கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கில் முதல் நடவடிக்கை இதுவாகும்.
தேவஸ்தான தலைவர் பிரசாந்த்
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் பிரசாந்தை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கில் முதல் நடவடிக்கை இதுவாகும்.

சிறப்பு விசாரணை

கேரளத்தில் முந்தைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சியின் போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற தங்கம் கொள்ளை சம்பவம் கடந்த ஆண்டு(2025) வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக தேவஸ்தான முன்னாள் தலைவர்கள் என்.வாசு, பத்மகுமார், அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் போற்றி உட்பட 13-க்கும் மேற்பட்டோரை சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்தனர்.

அப்போது தேவஸ்தான தலைவராக இருந்த பிரசாந்த் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், நேற்று திருவனந்தபுரம் கரகுளத்தில் உள்ள வீட்டில் வைத்து அவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிரடியாக கைது செய்தனர். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இவ்வழக்கில் எடுக்கப்பட்டுள்ள முதல் கைது நடவடிக்கை இதுவாகும்.

கைது

துவார பாலகர் சிலைக்கு தங்க தகடுகள் பதிப்பதற்காக, ஐகோர்ட்டு அனுமதியின்றி சென்னைக்கு கொண்டு செல்ல அனுமதி அளித்தது மற்றும் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் கூட்டுச்சதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரசாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன் மீதான கைது குறித்து பிரசாந்த் கூறுகையில் "எனக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை, என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பேன். 2025-ல் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்காமல் தங்கம் எடுத்துச் செல்லப்பட்டது மட்டுமே குறைபாடே தவிர, தங்கம் எதுவும் இழக்கப்படவில்லை" என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com